புதுடெல்லி: டெல்லி உட்பட 3 விமான நிலையத்தில் பயணிகளின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. விமான நிலையங்களில் நுழையும் போது பயணிகளின் அடையாளத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. அடையாள அட்டை மற்றும் விமான டிக்கெட்டை காண்பித்த பின்னர்தான் பயணிகள் உள்ளே நுழைய முடியும். இந்நிலையில், பயணிகளின் முகத்தை அடையாளம் கண்டு அவர்களை உள்ளே அனுமதிக்கும் டிஜி யாத்ரா என்ற மின்னணு முறையை டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் நேற்று மத்திய அரசு துவங்கியது. இதன்படி, டிஜி யாத்ரா ஆப்பை செல்போனில் பதிவிறக்கம் செய்தவர்கள், தங்கள் போர்டிங் பாசை விமான நிலைய வாயிலில் ஸ்கேன் செய்ய வேண்டும்.