நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் பள்ளி கல்வித்துறை வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில்  தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை வளாகத்தில் அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன்  கல்வி வளாகம்’’ என்று அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை; தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முதலமைச்சர் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்துக்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இத்துடன், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும். மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர்  பெயரில் விருதும் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: