நாடியா: மேற்குவங்கத்தில் இருவருக்கு ஏற்பட்ட மோதலில் ஒருவரை திரிசூலத்தால் கழுத்தில் குத்திய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் கல்யாணி பகுதியை சேர்ந்த பாஸ்கர் ராம் (35) என்பவருக்கும், மற்றொருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மற்றொரு நபர் பாஸ்கர் ராமை திரிசூலத்தால் கழுத்தில் குத்தினார். ரத்தம் கொட்டுவதை பார்த்த அவரது சகோதரி மயங்கி விழுந்தார்.
கழுத்தில் சிக்கிய திரிசூலத்தை அகற்ற முடியால் பாஸ்கர் ராம் வலியால் துடித்தார். அதன்பின், பாஸ்கர் ராமை அப்பகுதியினர் கிட்டதட்ட 65 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். திரிசூலம் கழுத்தில் சிக்கிய நிலையில் இருப்பதை பார்த்து மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கர் ராம், சுமார் 30 செ.மீ நீளமும், பல வருடங்கள் பழமையானதுமான திரிசூலத்தை மருத்துவர்கள் அகற்றினர்.
இதுகுறித்து டாக்டர் பிரணபாஷிஷ் பானர்ஜி கூறுகையில், ‘கிட்டதட்ட 150 ஆண்டுகள் பழமையான திரிசூலம் பாஸ்கர் ராமின் கழுத்தில் குத்தப்பட்டு இருந்தது. பரம்பரை பரம்பரையாக வீட்டில் வைத்து வழிபட்ட திரிசூலத்தை எடுத்து பாஸ்கர் ராமை குத்தியுள்ளனர். தற்போது பாஸ்கர் ராம் நலமுடன் உள்ளார்’ என்றார். இச்சம்பவம் தொடர்பாக நாடியா போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.