செயலிழந்து கிடக்கும் நாகப்பட்டினம் ரயில்வே பணிமனைக்கு தீர்வு: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:

ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நலனை புறக்கணித்து வருகிறது. இதில் ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகமும், தென்னக ரயில்வே நிர்வாகமும் குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. நீடாமங்கலம் மேம்பாலம், ரயில் பராமரிப்பு மையங்கள், சில ரயில்களின் எல்லை நீடிப்பு, நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பதும், ஒன்றிய அரசு ஏமாற்றுவதும் வழக்கமாகியுள்ளது.

ரயில்வே நிர்வாகத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து, மக்கள் நலனை முற்றிலுமாக கை கழுவி நிற்கிறது ஒன்றிய அரசு. புகழ்வாய்ந்த ரயில்வே பணிமனை செயல்பட்ட நாகபட்டினம் இன்று செயலிழந்து கிடக்கிறது. இந்தத் துயர நிலைக்கு தீர்வு காண, திருவாரூர், நாகபட்டினம் பகுதி பொதுமக்கள் ஒன்றுபட்டு 28ம் தேதி (இன்று) ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அமைதிப் பேச்சுவார்த்தையில் மக்கள் பிரதிநிதிகளிடம், அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழிகள் அலட்சியப்படுத்தியதன் மூலம் பொதுமக்களை ரயில்வே நிர்வாகம் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுகிறது. இந்த அணுகுமுறை உடனடியாக கைவிடப்பட்டு, பொதுமக்கள் கோரிக்கைகளை தென்னக ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: