நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் ரூ40 லட்சம் சுருட்டிய பாஜ நிர்வாகிகள்: சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு


திருமங்கலம்: நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட ரூ40 லட்சத்தை பாஜ நிர்வாகிகள் சுருட்டியதாக சொந்த கட்சியினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிட்டார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே அக்கட்சிக்குள் அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்து வந்தன. ஏற்கனவே விருதுநகர் தொகுதி தனக்குத்தான் என நினைத்து வேலை பார்த்து வந்த பேராசிரியர் ராம.சீனிவாசன் தரப்பு கடும் அதிருப்தியை வெளிக்காட்டியது. அக்கட்சியை சேர்ந்த டாக்டர் வேதா சுயேச்சையாக களமிறங்கினார்.

விருதுநகர் எம்பி தொகுதிக்கு மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், விருதுநகர் தொகுதி அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன.இருளப்பன் ஆகியோரை தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்களாக கட்சி தலைமை நியமித்தது. விருதுநகர் தொகுதி பாஜ வேட்பாளருக்காக தேர்தல் பணியாற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு கட்சியில் இருந்து குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை முறையாகவும், முழுமையாகவும் கட்சியினருக்கு கொடுக்கப்படவில்லை எனக்கூறி பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் அதிருப்தியடைந்தனர்.

பணம் கிடைக்காததால் பாஜ கட்சி நிர்வாகிகள், அதிருப்தி அடைந்த விவகாரம் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகள் உட்பட பல இடங்களில் நடந்த தேர்தல் வாக்குப்பதிவின்போது வெளிப்படையாகவே தெரிந்தது. பல பூத்களில் பாஜ சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளே இல்லை. இந்நிலையில் நேற்று திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாஜ தலைமையால் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், தொகுதி அமைப்பாளர் வெற்றிவேல், மேற்குமாவட்ட செயலாளர் சின்னசாமி, மேற்குமாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன. இருளப்பன் ஆகியோர் படங்களுடன் கூடிய கண்டன போஸ்டர்கள் அக்கட்சி சார்பில் ஒட்டப்பட்டிருந்தன.

அதில், ‘நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு. பாஜ விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி, பூத் ஏஜென்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ40 லட்சம் வரை சுருட்டிய இந்த நபர்கள் மீது, பாஜ மாநில தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என ஒட்டப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அனைத்தையும் சிறிது நேரத்தில் கட்சி நிர்வாகிகள் கிழித்தெறிந்தனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூத் ஏஜெண்ட்களுக்கு பணத்தை பாஜ நிர்வாகிகள் சுருட்டியதால் மோதல் ஏற்பட்டுள்ளது.

The post நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் ரூ40 லட்சம் சுருட்டிய பாஜ நிர்வாகிகள்: சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: