வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டார். சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்த  ஜோஸ்பின் ராயன்  என்ற பெண் சென்னை கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து,   அரசின் அனுமதியின்றி போலியாக கிரீன்வேஸ் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஒருவர் அலுவலகம் நடத்தி வருகிறார். வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக இளைஞர்களை மூளை சலவை செய்து பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகார் உண்மை என அறியப்பட்டது.

இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் கலாராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், ரமேஷ் (38) என்பவர், அரசின் அனுமதியின்றி போலியாக வடபழனியில் கிரீன்வேஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வந்தது தெரிந்தது. பிட்டர், வெல்டர், கார்பென்டர், மெக்கானிக், செவிலியர் என பல பணிகளுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தலா ₹2.5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை பணத்தை பெற்றுள்ளார். பொய்யான வாக்குறுதி கொடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி ஏமாற்றியதும் தெரிந்தது.  இதனையடுத்து ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து அசல் பாஸ்போர்ட் - 45, மெடிக்கல் ரிப்போர்ட் - 100, நபர்களுக்கு வழங்கப்பட்ட ஒர்க் பெர்மிட்டின் நகல், விண்ணப்பங்கள், வங்கி காசோலைகள், மோசடி செயலுக்கு பயன்படுத்திய கணினி,  கார், இரண்டு சக்கர வாகனம் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், சுற்றுலா விசாவில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வது சட்டத்திற்கு புறம்பானது. வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் சந்தேகங்களை சரிசெய்து கொள்ளவும், தரகர்கள் கடைசி நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து தரும் விசாக்களை நம்பி வெளிநாடு செல்லவேண்டாம் என கூறியுள்ளார்.

Related Stories: