பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை சரமாரி வெட்டிய 2 பேர் கைது: திருமுல்லைவாயலில் பரபரப்பு

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் பெண்களை ஆபாசமாக பேசியதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் 12 பேரை கத்தியால் சரமாரி வெட்டிய கும்பலை சேர்ந்த 2 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான ஒருவரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆவடி அருகே திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலை, கணபதி நகரை சேர்ந்தவர்கள் அபினேஷ் (25), விஷ்ணு (22), முத்து (24). ஏசி மெக்கானிக்குகளான 3 பேரும் அடிக்கடி மது மற்றும் கஞ்சா போதையில், தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவுவாயிலில் அமர்ந்து, அவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை தரக்குறைவாக பேசி, கேலி கிண்டலுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் அபினேஷ், விஷ்ணு, முத்து ஆகிய 3 பேரும் குடியிருப்பின் வாசலில் அமர்ந்து, அவ்வழியே நடந்து செல்லும் இளம்பெண்களை தரக்குறைவாக பேசி கிண்டலடித்து கொண்டிருந்தனர். இதில் ஆத்திரமான அதே பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி (38) என்ற பெண், 3 பேரையும் தட்டிக் கேட்டுள்ளார். சீதாலட்சுமியுடன் அவரது மகன் கமலேஷ் (17) என்பவரும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கஞ்சா போதையில் அபினேஷ், விஷ்ணு, முத்து ஆகிய 3 பேரும் அறைக்குள் மறைத்து வைத்த 2 பட்டாக்கத்திகளை எடுத்து வந்து, சீதாலட்சுமி மற்றும் அவரது மகனை சரமாரி வெட்டியுள்ளனர். இதில் தாய், மகன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

போதையில் தாக்குதல் நடத்திய 3 பேரையும் அப்பகுதியை சேர்ந்த சந்திரலேகா (40) என்ற பெண்ணும் அவரது மகன் விஜய் (20) என்பவரும் தடுக்க முயன்றுள்ளனர். இதில் ஆத்திரமான 3 பேரும் அவர்கள் இருவரையும் பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டியுள்ளனர். இதேபோல் அப்பகுதியை சேர்ந்த 12 பேரை கஞ்சா போதையில் இருந்த அபினேஷ், முத்து, விஷ்ணு ஆகிய 3 பேரும் பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டியதில் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கஞ்சா போதையில் சுற்றி திரிந்த அபினேஷ், விஷ்ணு ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். மேலும், பட்டாக்கத்தி தாக்குதலில் படுகாயம் அடைந்த 12 பேரையும் அம்பத்தூர், திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்களை தரக்குறைவாக பேசி, தட்டிக் கேட்ட 12 பேரையும் பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டிய அபினேஷ், விஷ்ணு ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவான முத்து என்பவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

 

The post பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை சரமாரி வெட்டிய 2 பேர் கைது: திருமுல்லைவாயலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: