ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 162 பேர் பலியாயினர். 700 பேர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.6 என பதிவாகியது. நில நடுக்கத்தினால் ஏராளமான மருத்துவமனைகள், பள்ளி கட்டிடம் உள்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 10 முதல் 15 நொடிகள் வரை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் அதில் வசித்தவர்கள் அலறி அடித்து தெருக்களை நோக்கி ஓடினர். சியாஞ்சூரில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.