மனைவியை கழுத்தறுத்து கொன்று கணவர் தற்கொலை ;கோவில்பட்டியில் பயங்கரம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் புது வீடு கட்டியதில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டி கடலையூர் சாலை, பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (45). கொத்தனார். இவரது மனைவி பரணிசெல்வி (40). இவர் லாயல் மில் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு மனோஜ் என்ற மகனும், உமா என்ற மகளும் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகரில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர். இதற்காக வாங்கிய கடன் தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மனோஜ் பெட்டிக்கு கடைக்கும், உமா வெளியேயும் சென்றுள்ளனர். மனோஜ் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. வெகுநேரமாக தட்டியும் திறக்கப்படவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அவர் பெற்றோரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால், இருவரும் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து மனோஜ் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். தகவலறிந்து கிழக்கு போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பரணி செல்வி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ராஜபாண்டியும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தம்பதியருக்குள் நடந்த சண்டையில் மனைவி பரணி செல்வியின் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு, தானும் கழுத்தை அறுத்து ராஜபாண்டி தற்ெகாலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: