புதுடெல்லி: இந்தோனேசியாவில் இந்தாண்டில் சிறுநீரகம் பாதித்து 99 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து, இருமல் மருந்துகளின் விற்பனைக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது. ஆப்பிரிக்கா, காம்பியாவில் இருமல் மருந்து உட்கொண்ட 66 குழந்தைகள் சமீபத்தில் பலியாயின. இந்திய மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை சாப்பிட்டது தான் இதற்கு காரணம் என்று காம்பியா அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக இந்திய மருந்து நிறுவனத்துக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இருமல் மருந்தால் தனது நாட்டில் இந்தாண்டு 99 குழந்தைகள் பலியாகி உள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.