நெல்லையைச் சேர்ந்த பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் மரணம்: பத்மஸ்ரீ விருது பெற்றவர்

நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94) சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் 1928ல்  நெல்லை தச்சநல்லூர் அருகேயுள்ள சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் சுப்பையா  பிள்ளை - சுப்பம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆரம்பப்  பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்த முதல் ஆசான் ராம அய்யர். உயர்நிலை  பள்ளியில் தமிழாசிரியர் நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோரே இவரது  தமிழார்வத்துக்கும், தமிழ் அறிவுக்கும் வித்திட்டவர்கள். சங்கீத அறிவை தனது  தந்தையாரிடமிருந்து பெற்றார்.

தன்னுடைய 14வது வயதிலே \\”குமரன்  பாட்டு\\” என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டார். இது \\”பொன்னி\\” என்ற இலக்கிய மாத  சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. இவரை 1940ல் சென்னைக்கு அழைத்து வந்த  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தனது வீட்டிலேயே தங்க வைத்து கல்கி  எழுதிய காந்தியின் சுயசரிதையை கொடுத்து அதை வில்லுப்பாட்டாக்கிப்  பாடச்சொன்னார். காந்தி மகான் கதையை எழுதி 10  ஆண்டுகளுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.  இதேபோல் திரும்பி வந்த பாரதி,  திலகர் கதை, புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை எழுதி  பாடியுள்ளார்.

1000த்திற்கும் மேற்பட்ட  வில்லிசை நிகழ்ச்சிகளை வானொலி, தொலைக்காட்சி, கோயில்களில் பாடி  மக்களின் அன்பைப் பெற்றார். தனது வில்லுப் பாட்டின் வாயிலாக மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்த  பெருமைக்குரியவர். 1975ல் கலைமாமணி விருதும், 2005ல் ஒன்றிய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார். 2021ல் இவருக்கு பத்மஸ்ரீ விருதை ஒன்றிய அரசு வழங்கி கவுரவித்தது. கலைவாணரது 19  திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின் அறுபது  திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம்  எழுதிக்கொடுத்தார்.  தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் 145 ஆண்டுகளில் இல்லாத தமிழை ஒலிக்கச்  செய்தார்.  இவரது ஒரு மகனும் உள்ளனர்.

Related Stories: