அட்டப்பாடியில் கஞ்சா, சாராய கடத்தலை பெண்கள் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும்-கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் பேச்சு

பாலக்காடு :  பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் அகழியில் நேற்று போதைத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.  எம்எல்ஏ ஷம்சுதீன் தலைமை தாங்கினார்.

இதில், கலால் துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ராஜேஷ் கலந்து கொண்டு பேசியதாவது: அட்டப்பாடி மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதியில் போதைத்தடுப்பு விழிப்புணர்வு மக்களுக்கு சென்றடையவும், இவற்றை வெளிப்படுத்துவது என்பது சுயஉதவிக்குழு மகளிரால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

இப்பகுதிகளில் அதிகளவு சில சமூக விரோதிகள் கஞ்சா பயிர்செய்து விற்பனை செய்து வருகின்றனர். இவற்றிற்கு இப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் அவர்களுக்கு உறுதுணையாக உள்ளனர். ஏறமுடியாத மலைகளின் பாறை இடுக்குகளில் கள்ளச்சாராயம் காய்த்துதல், கஞ்சா செடிகள் பயிரிடுதல் ஆகியவற்றிற்கு மலைவாழ் மக்கள் உறுதுணையாக போவதை பெண்கள் தடுக்க வேண்டும். அட்டப்பாடி மலைவாழ் மக்கள் கிராமம் கடந்த 1997ம் ஆண்டு முதற்கொண்டு சாராயம், போதைப்பொருள்கள் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ள பகுதியாகும்.

இதனை மீறி கஞ்சா, கள்ளச்சாராயம், மதுபாட்டில்கள் மற்றும் சந்தனமரங்கள் வெட்டி கடத்தல் ஆகிய தொழில்களில் ஈடுபடுவர்களை தடுக்க குடும்ப பெண்கள் நினைத்தால் முடியும். இதற்கு குடும்பஸ்ரீ சுய உதவிக்குழுவினர் முன்நின்று செயல்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் குடும்ப ஸ்ரீ இயக்குநர் ஜாபர்மாலிக், ஒத்தப்பாலம் சப்-கலெக்டரும், அட்டப்பாடி நோடல் அதிகாரியுமான தர்மலஸ்ரீ, அட்டப்பாடி பிளாக் பஞ்சாயத்து தலைவர் மாரூதிமுருகன், குடும்பஸ்ரீ மாவட்ட மிஷன் ஒருங்கிணைப்பாளர் மனோஜ், ஜோய் இளமண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: