வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை கூட்டம்-துவரங்குறிச்சியில் நடைபெற்றது

துவரங்குறிச்சி : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் முதல் நிலை மீட்பு ஒத்திகை கூட்டம் பணியாளர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது.திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் 2022 வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதனை எப்படி எதிர்கொள்வது என்று மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி தலைமையிலான சிறப்பு ஒத்திகை கூட்டம் நடைபெற்றது. இதில் மருங்காபுரி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினரால் ஒத்திகை செயல்விளக்கம் நடைபெற்றது. மேலும் ஆபத்துக் காலங்களில் 112 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தீயணைப்பு துறையினர் பொது மக்களிடையே அறிவுறுத்தினர்.

மேலும் மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி பேசும்போது, மருங்காபுரியைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும், மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும் எனவும், மழைக்காலங்களில் பயிர்கள் நீரில் மூழ்காமல் இருக்க குளம், குட்டைகளில் நீர் நிலைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும், மழை நேரத்தில் மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மருத்துவத்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, விவசாயத் துறை அலுவலர்கள், பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ், வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் தீனதயாளன், என பலதுறை அமைப்பு சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: