ஒன்றிய அரசு தடை விதிக்க கோரிய 50-60% டிவிட்கள் தீங்கு ஏற்படுத்தாதவை: டிவிட்டர் பரபரப்பு வாதம்

பெங்களூரு: ‘ஒன்றிய அரசு தடை விதிக்கக் கோரியதில் 50- 60 சதவீத டிவிட்கள் தீங்கு ஏற்படுத்தாதவை’ என டிவிட்டர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. தவறான தகவல்களை பரப்பும் கணக்குகள் மற்றும் டிவிட்களை அகற்றுமாறு டிவிட்டருக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. ‘ஒன்றிய அரசின் இந்த உத்தரவு  கருத்து சுதந்திரத்தை மீறுவதாகும், சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பாமல் குறிப்பிட்ட கணக்குகளை நீக்க உத்தரவிடக்கூடாது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டிவிட்டர் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை எதிர்த்து  ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 101 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்நிலையில், டிவிட்டர் சார்பில் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல் அரவிந்த் தத்தார் வாதிடுகையில்,‘‘தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை நிறுவனம் பின்பற்றுகிறது. விதிகளை மீறுவோருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பாமல் குறிப்பிட்ட நபர்களின் டிவிட்டர் கணக்குகளை அகற்றுமாறு  உத்தரவிடப்படுகிறது. ஆட்சேபனைக்குரிய டிவிட்டர் பதிவுக்காக ஒட்டுமொத்த கணக்கை முடக்கும்படி அரசு சொல்கிறது. இது எங்களுடைய தொழிலை பாதிக்கும். டெல்லி, விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகள் டிவி, மீடியாக்களில் வெளி வந்தன. ஆனால், அது போன்ற செய்திகளை வெளியிட்டவர்கள் கணக்கை முடக்க சொல்வதில் என்ன நியாயம்? இது அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஐடி தடுப்பு விதிகள் 6 மற்றும் 8ம் பிரிவுகளுக்கு எதிரானது. அரசு உத்தரவிட்ட 50 முதல் 60 சதவீத கணக்குகள் தீங்கற்றவையாக உள்ளன’’ என்று கூறினார். வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Related Stories: