போலி செய்தி பரப்பிய 10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோ முடக்கம்

புதுடெல்லி: சில யூடியூப் சேனல்களில் வெளியிடப்படும் வீடியோக்கள் மத நல்லிணக்கம் மற்றும் பொதுமக்கள் அமைதிக்கு பாதகம் ஏற்படும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை முடக்கும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி 10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை முடக்கி ஒன்றிய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உளவு துறை தகவலின்அடிப்படையில் போலி செய்திகளை பரப்பிய 45 வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளது. பிளாக் செய்யப்பட்ட வீடியோக்களை 1.30 கோடி பேர் பார்த்துள்ளனர். ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டம், ராணுவம், காஷ்மீர் போன்ற விவகாரங்களில் தவறான தகவலை பரப்புவதற்கு இந்த வீடியோக்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிப்பதோடு, பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தன்மை கொண்டவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: