லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்தவர்கள் லக்னோ சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை இணை ஆணையர் பியுஷ் மோர்டியா கூறுகையில், தில்குஷா பகுதியில் ராணுவ குடியிருப்பை ஒட்டி சில தொழிலாளர்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடுமையான மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். ஒருவரை கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து பத்திரமாக மீட்டனர் என்றார். இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் வேறு யாரேனும் உயிரிழந்துள்ளனரா என காவல்துறையினர் தேடி வருகின்றனர்.