பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல்(32), ஆட்டோ டிரைவர். இவருக்கும் பண்ருட்டி களத்துமேடு பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் சுமன் (25) என்பவருக்கும் இளம்பெண்ணுடன் பழகுவது தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், தட்டாஞ்சாவடி காளியம்மன் கோயில் செடல் திருவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட சக்திவேலும், சுமனும் இரவில் அப்பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுமனும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சக்திவேலை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சுமன், அவரது கூட்டாளி பட்டிஸ்டா குணா, வசந்தகுமார், குணா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.