இங்கிலாந்து அரச குடும்பத்திடம் உள்ள கோஹினூர் வைர கிரீடத்தை மீட்கணும்: ஜனாதிபதிக்கு ஒடிசா அமைப்பு கடிதம்

லண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்திடம் உள்ள கோஹினூர் வைர கிரீடத்தை மீட்க வேண்டும் எனக்கோரி, ஜனாதிபதிக்கு ஒடிசாவை சேர்ந்த அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் (3) மன்னராக அரியணை ஏறினார். அரச குடும்பத்தின் விதிமுறைகளின்படி, ராணி எலிசபெத் அணிந்திருந்த 105 காரட் வைர கிரீடம் புதிய மன்னரின் மனைவியான கமீலா இனிமேல் அணிந்து கொள்வார்.

இந்த கோஹினூர் வைர கிரீடமானது, ஆங்கிலேய படையெடுப்பு காலத்தில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் வைர கிரீடத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ஒடிசா மாநிலத்தின் சமூக, கலாசார அமைப்பின் தலைவர் பிரியா தர்சன் பட்நாயக் என்பவர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோஹினூர் வைரமானது ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சொந்தமானது.

பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானின் நாதிர் ஷாவுக்கு எதிரான  போரில் வெற்றி பெற்ற பின்னர், பூரி ஜெகநாதருக்கு நன்கொடையாக அளித்தார். எனவே தற்போது இங்கிலாந்து ராணியிடம் உள்ள கோஹினூர் வைர கிரீடத்தை மீண்டும் இந்தியா கொண்டு வர வேண்டும். அதேபோல் அந்த வைரத்தை பூரி ஜெகநாதர் கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: