நெமிலி அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு தனியார் பள்ளி பஸ் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தது: டிரைவர், மாணவர்கள் கீழிறங்கி ஓடி தப்பினர்

நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பிரபல தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு சொந்தமான மினி பஸ் நேற்று காலை நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 4 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அரக்கோணம்- காஞ்சிபுரம்  தேசிய நெடுஞ்சாலையில், சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே வந்தபோது பஸ்சின் முன்பக்க இன்ஜினில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். மாணவர்களை அவசர அவசரமாக கீழே இறக்கினார். அவரும் பஸ்சில் இருந்து இறங்கிவிட்டார். ஒரு சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து நெமிலி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதன் காரணமாக அரக்கோணம்- காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: