ஆலப்பாக்கம் ஆலயத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் சுமார் 50 ஆண்டு பழமை வாய்ந்த கிராம தேவதை ஆலயத்தம்மன் கோயில் புனரமைக்கும் பணி முடிவடைந்து கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடந்தது. பந்தகால் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் விழா தொடங்கியது. காலையில் கணபதி பூஜை, சங்கல்பம்,  மகாபூர்ணாஸ்ஹுதி உள்ளிட்டவை நடந்தது. 2ம் கால, 3ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. இன்று காலை 7.30 மணியளவில் புரோகிதர்கள் யாக சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை கோயில் சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வந்து அம்மன், மூலவருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், 108 குங்குமம் அர்ச்சனை உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Related Stories: