ராஜபாளையத்தில் கொள்முதல் செய்த கரும்புகளை ஆலைக்கு எடுத்துச் செல்ல தாமதம்-எடை குறைவதால் விவசாயிகள் வேதனை

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் கொள்முதல் செய்த கரும்புகளை ஆலைக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் செய்வதால், அவைகள் எடை குறைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, ஆலை நிர்வாகம் கொள்முதல் செய்த கரும்புகளை உடனடியாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மா, தென்னை, வாழை, ஆலைக்கரும்பு, நெல் மற்றும் பல்வேறு பயிர் வகைகளை கிணற்று பாசனம் மற்றும் மழைநீர் மூலம் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். விளைந்த கரும்புகளை அறுவடை செய்து, தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கரும்பாலைக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கரும்பாலை செயல்படாமல் உள்ளது. விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கிப் பணத்தை தரவில்லை; ஆலையை மூடிவிட்டனர். இது தொடர்பாக விவசாயிகள் பல போராட்டம் நடத்தியும் பயனில்லை.

இந்நிலையில், தற்போது விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்புகளை வெட்டி தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் கரும்பாலைக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால், கொள்முதல் செய்யும் கரும்பாலை கரும்புகளை எடுத்துச் செல்ல காலதாமதம் செய்கின்றனர். இதனால், கரும்புகளை எடை குறைவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளை காப்பாற்ற, அரசு கரும்பாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: