சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை மடாதிபதிக்கு நெஞ்சு வலி: 3 நாள் போலீஸ் காவல்

பெங்களூரு: கர்நாடகாவில் சிறுமிகள் பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் முருக மடத்தின் சார்பில் இயங்கி வரும் விடுதியில் தங்கி படித்த மாணவிகளுக்கு மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணரு, பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகவும், அத்துமீறி நடந்து கொண்டதாகவும் விடுதியில் இருந்து வெளியேறிய மாணவிகள் புகார் கூறினர். இதன் அடிப்படையில் மடாதிபதி உள்பட 5 பேர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் இருந்த நிலையில், நேற்று காலை நெஞ்சுவலி காரணமாக அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீசாரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மடாதிபதியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

Related Stories: