பாஜ ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மோடியே பிரதமராக தொடருவார்: கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதிலடி


மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் மீண்டும் நரேந்திரமோடியே பிரதமராக தொடருவார் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரசாரத்தில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியுடன் பிரதமருக்கு 75வயது ஆகப்போகிறது. பாஜவில் 75வயதானவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்ற விதியை அவர் தான் உருவாக்கினார். பிரதமர் மோடி அமித் ஷாவுக்காக தான் வாக்குசேகரிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது நிறுவனம் மற்றும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணிக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், மோடிக்கு 75வயது ஆனாலும், நீங்கள் மகிழ்ச்சியாக உணரவேண்டிய அவசியம் இல்லை. பாஜவின் அரசியலமைப்பில் எதுவும் எழுதப்படவில்லை.

மோடி அவரது பதவி காலத்தை நிறைவு செய்வார். நாட்டை தொடர்ந்து வழிநடத்துவார். இதில் பாஜவுக்கு எந்த குழப்பமும் இல்லை” என்றார்.அதே போல் பாஜ தலைவர் ஜே.பி.நட்டா, ‘மோடியை எதிர்கொள்ள எதிர்க்கட்சி கூட்டணிக்கு கொள்கையும், திட்டமும் இல்லை. தோல்வியை உணர்ந்த கெஜ்ரிவாலும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் இப்போது நாட்டை தவறாக வழிநடத்துவதில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். மோடியின் வயதுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேசுகிறார்கள். பாஜவின் அரசியலமைப்பில் வயது தொடர்பான எந்த விதியும் இல்லை. மோடிதான் எங்கள் தலைவர், எதிர்காலத்தில் எங்களைத் தொடர்ந்து வழிநடத்துவார்’ என்றார்.

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில்,’ மோடியின் தலைமையில் தான் பாஜ தேர்தலில் போட்டியிடுகிறது. அவர் மூன்றாவது முறையாக பிரதமராகி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்வார். இதுபற்றி பாஜவிலோ, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ அல்லது மக்கள் மத்தியிலோ எந்தக் குழப்பமும் இல்லை. மோடி பாஜவின் இதயத்தில் இருக்கிறார்’ என்று கூறினார்.

The post பாஜ ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மோடியே பிரதமராக தொடருவார்: கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: