பெண் கொடுத்த புகாரில் அதிரடி: பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ வெளியிட்ட பாஜ நிர்வாகி கைது


பெங்களூரு: பாலியல் வன்கொடுமை புகாரில் ஹாசன் மாவட்ட பாஜ நிர்வாகி தேவராஜ் கவுடாவை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘இந்த வீடியோக்களை பாஜ தலைவர் தேவராஜே கவுடாவிடம் கொடுத்தேன்’ என பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கார்த்திக் கூறினார். மேலும் இந்த வீடியோக்களை பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக வெளியிட்டது தேவராஜே கவுடா தான் என்றும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நிலம் தொடர்பான பிரச்னை குறித்து திருமணமான பெண் ஒருவர் தேவராஜே கவுடாவை சந்தித்து சட்ட ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு உதவி செய்த அவர் மீண்டும் அந்த பெண்ணை தன் வீட்டிற்கு வர சொல்லி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தேவராஜே கவுடாவால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஏப்ரல் 1ம் தேதி புகார் அளித்துள்ளார். இதையடுத்து தேவராஜே கவுடாவுக்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேரில் ஆஜராக அவருக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

அதை தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதையறிந்த தேவராஜ் கவுடா, ஹாசன் மாவட்டத்தில் இருந்து தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூர் தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தியபோது காரில் வந்த தேவராஜ் கவுடாவை நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர்.

The post பெண் கொடுத்த புகாரில் அதிரடி: பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ வெளியிட்ட பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: