நெல்லை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குமாரகோவில தெருவைச் சேர்ந்தவர் பூவலிங்கம் (47). இவரது மகன்கள் பூதத்தான்(17), சிவசண்முகா(15). இவர்கள் அம்பையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2020-21ம் கல்வியாண்டில் 10 மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனா தொற்று காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் அரசு அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. ஆனால் சகோதரர்கள் இருவரும் பாஸ் செய்யப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் குடும்பத்துடன் வீட்டில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிப்.15ல் அம்பையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி சகோதார்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார், வருவாய்த்துறை, பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குடும்பத்தினருடன் ேபச்சுவார்த்தை நடத்தி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை பாதிக்கப்பட்ட மாணவர்கள், தந்தையுடன் கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து மாணவர்களை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.