2 மாதங்களில் 2வது முறை சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 2வது முறையக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் சோனியா காந்திக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லோக் நாயக் மருத்துவமனையில் சில நாட்கள் அவர் சிகிச்சை பெற்றார். இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சோனியா காந்தி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்றார். இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட வழக்கமான உடல் பரிசோதனையின்போது கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால்., மருத்துவர்களின் அறிவுரையின்படியும், அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படியும் அவர் வீட்டிலே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மேலும், சமீப நாட்களாக சோனியா காந்தியை சந்தித்தவர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: