மக்கள் நலப் பணியாளர்களுக்கு 2 வார அவகாசம் விரும்பினால் பணியில் சேர்ந்து கொள்ளுங்கள்: உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: அடுத்த இரண்டு வாரத்தில் விருப்பப்படும் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி அஜய் ரஸ்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் குமணன், ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7500 ஊதியத்தில், கடந்த 10 ஆண்டுகளில் இறந்த மக்கள் நலப்பணியாளர்களின் வாரிசுகளுக்கும் வேலை வழங்கப்படுகிறது. இதை 96 சதவீதம் பேர் ஏற்று பணியில் சேர்ந்துள்ளனர். ஒரு சில அமைப்புகள் மட்டுமே எதிர்கின்றன,’ என தெரிவித்தனர்.

மக்கள் நலப்பணியாளர் விழுப்புரம் தன்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிப்பிரியா, ‘இந்த பிரச்னையில் பணி பாதுகாப்புதான் மிகவும் முக்கியமானது. ரூ.7,500 சம்பளம் வழங்குவதை ஏற்க முடியாது. அதை ஊதியக்குழு பரிந்துரையின்படி மாற்ற வேண்டும்,’ என்றார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சம்பள விவகாரம் அரசின் நிதிக் கொள்கையை சார்ந்தது என்பதால், அதில் தலையிட விரும்பவில்லை. பணி பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அது குறித்து உறுதியான உத்தரவு பிறப்பிக்கப்படும். தற்போது, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் மீதமுள்ள மக்கள் நலப்பணியாளர்கள் விருப்பப்பட்டால் பணியில் சேரலாம். பணி ஓய்வு வயது குறித்து அனைத்து தரப்பும் அறிக்கை தாக்கல் செய்தால், அதை மாநில அரசிடம் பரிசீலனை செய்து இறுதி முடிவை எடுக்கிறோம்,’ என தெரிவித்தனர். அப்போது, ‘அவகாசம் முடிந்திருந்தாலும் விருப்பப்படும் மக்கள் நலப்பணியாளர்களை பணியில் சேர்க்கத் தயார்,’ என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: