பூனைக்குட்டி வெளியே வந்தது; ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத்தயார்?: டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத்தயார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க. கட்சியில் நடக்கும் சண்டையில் நான் இல்லை. நான் தனிக்கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அ.ம.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. நாங்கள் நடத்தும் போராட்டத்தில் வெற்றிபெறுவோம். அ.தி.மு.க.வை திரும்பப்பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் இணைப்பதற்கு டெல்லியில் சில நலம் விரும்பிகள் முயற்சி மேற்கொண்டது உண்மை தான். எடப்பாடி பழனிசாமியிடம் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் கிடையாது. ஆனால் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் முதல்-அமைச்சர் வேட்பாளராக அவரை களம் இறக்கக்கூடாது என்று தெரிவித்தேன். அவரை முன்னிலைபடுத்தினால் அ.தி.மு.க. வெற்றி பெறாது என்றேன். ஆனால் எங்களது முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. அதனால் டெல்லி மேலிடமும், எடப்பாடி பழனிசாமியை கை கழுவி விட்டனர். கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி சீனியராக இருந்ததால் அவரை முதல்-மந்திரி பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார். ஆனால் அவர் கட்சி தொண்டர்களுக்கும், சசிகலாவுக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார்.

எடப்பாடி பழனிசாமியை எந்தவிதத்திலும் நம்ப முடியாது. சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபோது அவர் தமிழகத்துக்கு வந்து செல்ல அனுமதி கொடுக்க மறுத்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று கூறினார். அந்த அளவுக்கு அவர் கொடூரராக நடந்து கொண்டார். அரசியலுக்காக அவர் எதையும் செய்வார். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தது மிகப்பெரிய தவறாகும். அதை அவர் இப்போதுதான் உணருகிறார். எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்ப இயலாது. எனவே எந்த காலத்திலும் அவருடன் சேரும் எண்ணம் இல்லை.

சசிகலாவுக்காக நாங்கள் தலைவர் பதவியை தயாராக வைத்துள்ளோம். கோர்ட்டில் அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உரிமையை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை ஏற்பார். அதன்பிறகு மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். நாங்கள்தான் அம்மாவின் உண்மையான விசுவாசிகள் என்பதை நிரூபித்து காட்டுவோம். அதன்பிறகு ஒவ்வொருவராக நிச்சயம் எங்கள் பக்கம் வருவார்கள். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் கூட்டணி மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சசிகலாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது மெல்ல மெல்ல சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியுள்ளார். இதனால் அவருடன் இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: