கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் காட்சியகம்: புகைப்படம் எடுத்தும் மகிழும் பார்வையாளர்கள்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களை தொல்லியல்துறையினர் காட்சிப்படுத்தியிருப்பது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கொடுமணலில் 2,400 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழர்கள் வணிகம், தொழிற்கூடம் என நாகரீகத்துடன் வாழ்ந்த வரலாற்று எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற பானை ஓடுகள், பளிங்கு கற்கள், பாசிகள் உள்ளிட்ட ஆபரணங்கள் ஈரோடு சிக்கய்யர் நாயக்கர் கல்லூரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் சுடுமண் குழாய்கள், சங்கு வளையல்கள், இரும்பு பொருட்கள் போன்றவற்றை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், நொய்யல் நாகரீகத்தை தொல்லியல்துறையினர் காட்சிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கற்படிகளுடன் கூடிய கிணறு, இரும்பு உருக்கு தொழிற்சாலை, நீத்தாரை அடக்கம் செய்த கற்பதுக்கு ஆகியவற்றை தத்ரூபமாக வடிவமைத்திருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அகழாய்வு கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொருட்களை புகைப்படங்கள் எடுத்தும், அவற்றின் முன்பு குழுவாக நின்று செல்பி எடுத்தும் பள்ளிக்கல்வி மாணவர்கள் மகிழ்கின்றனர். இதனிடையே கொடுமணலில் இதுவரை கிடைத்த பொருட்களை அனைவரும் அறியும் வண்ணம் நிரந்தரமாக காட்சியகம் அமைக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: