சென்னை: சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகளை ஜனவரி 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் தை மாதம் தொடக்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் போது ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் கலைநிகழ்ச்சிகளை 14ம் தேதி மாலை 6 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தொடக்க விழாவை அடுத்து, ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம், ராஜரத்தினம் விளையாட்டரங்கம், தி.நகர் நடேசன் பூங்கா, ராஜா அண்ணாமலைபுரம்- அரசு இசைக் கல்லூரி வளாகம், கிண்டி கத்திபாரா சந்திப்பு, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா,
அசோக் நகர் மாநகராட்சி விளையாட்டு திடல், வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், ஜாபர்கான் பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் பூங்கா, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி மைதானம் ஆகிய 20 இடங்களில் 15.1.2026 முதல் 18.1.2026 வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளன. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்த உள்ளனர்.
