சென்னை: மெரினா கடற்கரை, அண்ணா பூங்கா அருகில் 86.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வீடற்றோருக்கான இரவுநேர காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மெரினா கடற்கரை, அண்ணா பூங்கா அருகில் சென்னை மாநகராட்சி சார்பில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் கட்டப்பட்டு வந்தது. ரூ.86.40 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், காப்பகத்தில் தங்கிடும் 86 பேருக்கு பாய், தலையணை, படுக்கை விரிப்பு உள்ளிட்ட நல உதவி தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மெரினா கடற்கரையில் தங்கி, கைவினைப் பொருட்கள், பலூன்கள், அழகு சாதன பொருட்கள், பூக்கள் எல்லாம் விற்று வந்த 86 ஆதரவற்றோர்களுக்கு முதல்வர் உத்தரவின்பேரில், சென்னை மாநகராட்சியின் சார்பாக, கடற்கரை பகுதியில் அவர்கள் தங்கியிருப்பதற்காக 2,500 சதுர அடியில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடற்றோர் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்திருக்கின்றோம். இரவு நேரங்களிலும், மழை நேரங்களிலும், வெயிலிலும் அவர்களுக்கு தங்குவதற்கு இடமில்லாமல் இருந்த சூழலில் அவர்களுக்கெல்லாம் இந்த வசதி ஒரு பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு முதல்வர் இந்த கட்டளையிட்டுள்ளார்.
இந்த காப்பகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பிடங்கள், குளியலறைகள், அவர்கள் பொருட்களை எல்லாம் சேமித்து வைப்பதற்கு அலமாரிகள், குடிநீர் வசதி, மின் வசதி இப்படி அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு இன்றைக்கு மாநகராட்சியின் சார்பாக பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களும் தரப்பட்டிருக்கிறது. இதே மாதிரி மெரினாவில் தங்கியிருக்கக்கூடிய மற்றவர்களுக்கும் இதுபோன்ற வசதியை விரிவுபடுத்துவதற்கான அந்த ஆலோசனைகளிலும் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம்.
ஏற்கனவே, மாநகராட்சியின் சார்பாக வீடற்றோர்களுக்கு ஒரு 45 இடங்களில் இதுபோன்று வசதிகள் இருக்கிறது. இது கூடுதலாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் ஆய்வு செய்து இங்கு பக்கத்திலேயே சொன்னதுபோல இன்னும் அதிகமான பேர் தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆலோசனைகளையும் செய்து கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே எஸ்ஐஆர் திட்டத்திற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். இந்த கால அவகாசம் போதாது என்று சொல்லியிருக்கிறோம்.
முக்கியமாக பீகாரில் எஸ்ஐஆர் அறிவித்து யாருடைய வாக்குகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கிறது என்று தெளிவாக முதலமைச்சர் தான் சொன்னார். எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்குகளை நீக்கியிருக்கிறார்கள். 97 லட்சம் நீக்கியிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது, எங்களுடைய தலைவர் தெளிவாக அத்தனை பேருக்கும் அறிவுரை வழங்கி இருக்கிறார். நீக்கப்பட்ட வாக்குகள், விடுபட்டு போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் இவர்களையெல்லாம் எப்படி சேர்ப்பது என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
