சாத்தூர் அருகே மூன்றாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

அருப்புக்கோட்டை : சாத்தூர் அருகே மூன்றாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கோல்வார்பட்டி நீர்தேக்கம் அருகே, சிவந்திபட்டி கிராமத்தில் மக்கள் வழிபடும் கல் உள்ளது. இக்கல்லின் மேற்புறத்தில் எழுத்துக்கள் தென்படுவதாக, அதே ஊரைச் சேர்ந்த இன்ஜினியர் கணேஷ் பாண்டியன், அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் விஜயராகவனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில், தொல்லியியல் பயிலும் மாணவர்கள் ராஜபாண்டி, சரத்ராம், மதன் ஆகியோர் அங்கு சென்று களஆய்வு செய்தனர்.

ஆய்வில் 6 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் மேற்புறத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளரும், ஓய்வு பெற்ற தொல்லியியல் துறை துணை இயக்குநருமான சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப் பெற்றது. இதுகுறித்து தொல்லியல் குழுவினர் கூறியதாவது:

இக்கல்வெட்டானது 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3ம் குலோத்துங்கன் சோழனின் ஆட்சி காலத்தில், அதாவது கிபி 1210ல் வெட்டப்பட்ட கல்வெட்டு ஆகும்.

இருஞ்சோ நாட்டில் உள்ள ஆலங்குடி குளமும், இருப்பைக்குடியில் உள்ள குளமும் தூர்வாரப்படாமல் பயன்பாடின்றி காணப்பட்டுள்ளது. இதனை ஆலங்குடி அரையனாதிச்சனான அழகிய பாண்டிய கருநிலக்குடி நாடாள்வான் என்பவரும், அவரது படைப்பிரிவான அறநிலை ஒதுக்கிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர்களும், இவ்விரு குளங்களையும் தூர்வாரி வாய்க்கால் அமைத்துள்ளனர்.இதற்காக இவ்வூர் மக்கள் பொற்றனேரி என்ற ஊரில் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை வழங்கினர் என கல்வெட்டு கூறுகிறது. இருஞ்சோ நாடு என்பது தற்போதைய சாத்தூர் பகுதியையும், இருப்பைக்குடி என்பது தற்போதைய இருக்கன்குடியையும் குறித்த ஊர் ஆகும்.

விருதுநகர் மாவட்டத்தில் சோழ அரசர்களின் கல்வெட்டுகள், திருச்சுழி, பந்தல்குடி, கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, திருவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இதில், 3ம் குலோத்துங்கன் சோழனின் கல்வெட்டு எங்கும் இடம் பெறவில்லை. சிவந்திபட்டி கிராமத்தில்தான் 3ம் குலோத்துங்கன் சோழர் கால கல்வெட்டு முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: