கோவில்பட்டி அருகே தறிக்கெட்டு ஓடிய லாரி தப்பிக்க முயன்ற உரிமையாளர் டயரில் சிக்கி பரிதாப பலி

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே தறிகெட்டு ஓடிய லாரியிலிருந்து தப்பிக்க முயன்ற டிரைவர் டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (60). லாரி டிரைவரான இவர், சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை நெல்லையில் இருந்து தனது லாரியில் பழைய வேஸ்ட் பேப்பர் ஏற்றிக்கொண்டு சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி அடுத்த இனாம் மணியாச்சி மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென இவரது கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடியது.

லாரியை நிறுத்த முடியாமல் பதறிய ராமகிருஷ்ணன், உயிர் தப்பும் பொருட்டு லாரியில் இருந்து கீழே குதிக்க முயன்றார். ஆனால், இதில் எதிர்பாராதவிதமாக அதன் டயரில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே விபத்துக்கு உள்ளான லாரியும் மேம்பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதிய நிலையிலேயே அந்தரத்தில் தொங்கியது.

தகவலறிந்து விரைந்து வந்த கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன், மேற்கு இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், எஸ்ஐ செந்தில்குமார் மற்றும் போலீசார், ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவில்பட்டி அருகே தறிக்கெட்டு ஓடிய லாரி தப்பிக்க முயன்ற உரிமையாளர் டயரில் சிக்கி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: