திருப்புவனம்: திருப்பாச்சேத்தி அருகே மின்சாரம் தாக்கி ராணுவ வீரர், தந்தை, சகோதரர் பலியாயினர். தோட்டத்தில் மின்வேலி அமைத்திருந்த கரும்பு விவசாயியை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, தஞ்சாக்கூர் அருகே முகவூரை சேர்ந்த விவசாயி அய்யனார் (எ) அய்யங்காளை(58). இவரது மகன்கள் அஜீத்(26), சுந்தரபாண்டி (22). அஜீத் ராணுவ வீரர். இவரது மனைவி விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆன நிலையில், குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் விடுமுறையில் சொந்த ஊர் வந்தார். சுந்தரபாண்டி போலீஸ் வேலைக்கு தேர்வாகி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அய்யனார், அஜீத், சுந்தரபாண்டி மூவரும் முயல் வேட்டைக்கு, மார்நாடு வயல்வெளி வழியாக சென்றனர். அப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியை மிதித்த மூவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். போலீசார் வழக்கு பதிந்து விவசாயி முத்துக்குமாரை கைது செய்தனர்.