வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் மூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடு மகாராஷ்டிர மாநிலம் சென்றுள்ளது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய முதலீடு மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேதாந்தா நிறுவனம் வாகனங்களுக்கு தேவையான ‘செமிகண்டக்டர்’ எனும் இயந்திர சாதன உற்பத்தி ஆலையை துவக்க வேதாந்தா நிறுவனமும், பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்து, இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் மேலும் சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியன. ஆனால், தமிழக அரசு விதித்த நிபந்தனைகளால் இந்த தொழிற்சாலை மும்பைக்கு சென்றுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் மகாராஷ்டிர மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளை துவக்கியுள்ளது. இதன் காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் 2 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. மேலும், மொத்த ஜிஎஸ்டி வருவாயாக சுமார் 1 லட்சத்து 20 ஆயிம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய இந்த முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய்  கைநழுவி போனதன் விளைவாக, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது இந்த அரசு. தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு உள்பட இதர கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டியது மாநில அரசின் கடமை. சுதந்திர இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு, தனியாரின் பங்களிப்பே இன்றியமையாததாக இருந்து வருகிறது.

Related Stories: