மதுரை: ஆக்கிரமிப்பை அகற்றுவதில் காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது, அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது ஊக்கப்படுத்தும் செயலாகும் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த பீட்டர் சுவாமிதாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நாகர்கோவில் குளத்தூர் பகுதியில் பறக்கை கால்வாய் சுமார் 16 கிமீ தூரம் சென்று சுசீந்திரம் குளத்தில் சேர்கிறது. இந்தப் பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் முறையாக தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் பிளீடர் ராமச்சந்திரன் ஆஜராகி, ‘‘இந்தப் பகுதியில் இருந்த 388 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 131 பேரின் ஆக்கிரமிப்புகள் அவர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டதும் அகற்றப்படும்’’ என்றார்.