ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே குட்டியுடன் நடமாடிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது பகல் நேரங்களில் சாலையில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் அருகே சாலையில் நடமாடியது. குட்டி யானையுடன் தாய் யானை சாலையில் நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.