ஆலங்குளம் எம்எல்ஏ அலுவலக பேனரில் இபிஎஸ் படம் அகற்றம்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் எம்எல்ஏ அலுவலக வாயிலில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி படத்தினை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அகற்றினர்.சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஏற்கவில்லை. மேலும், ஓ.பன்னீர் செல்வம் தான் தற்போது வரை ஒருங்கிணைப்பாளராக இருப்பதாக கூறி வருகிறார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருவரையொருவர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து வருகின்றனர். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுகி உள்ளனர். இந்நிலையில் நேற்று ஆலங்குளம் எம்எல்ஏ அலுவலகத்தில் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அரைமணி நேரம் பூட்டிய அறையில் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து வெளியே வந்த அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ்க்கு என்றும் தங்களின் நல் ஆதரவு தொடரும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்கள் ஆலங்குளம் எம்எல்ஏ அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை பிளேடால் கிழித்து அகற்றினர்.

Related Stories: