கூடலூர்: கேரள மாநிலம், சுல்தான் பத்தேரி அருகே கால்நடைகளை கொன்று, அட்டகாசம் செய்த 12 வயதான பெண் புலி கூண்டில் சிக்கியது. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டம், பத்தேரி தாலுக்கா, வாகேரி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புலி ஒன்றின் நடமாட்டம் காணப்பட்டது. அப்பகுதியில் கால்நடைகள், வளர்ப்பு நாய்கள் போன்றவற்றை அடித்துக்கொன்று புலி அட்டகாசம் செய்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர். இதையடுத்து, இந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வன அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இங்குள்ள ஏதன்வாலி தனியார் எஸ்டேட்டில் புலியின் நடமாட்டத்தை பார்த்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.