பாம்பன், ராமேஸ்வரம் கடலில் பலத்த சூறைக்காற்று: மீனவர்களுக்கு எச்சரிக்கை

ராமேஸ்வரம்: பாம்பன், ராமேஸ்வரம் கடலில் பலத்த சூறைக்காற்று வீசுவதால், மீனவர்கள் கடலில் பாதுகாப்பாக இருக்க மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் வளைகுடா கடலில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது பலத்த காற்றுடன் சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது. இதனால் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி, பாம்பன் தென்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருப்பதுடன் கரையேறும் அலைகளும் அதீத சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பாம்பன், மண்டபம் மற்றும் தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு செல்லவில்லை.  இதனால் நேற்று பாம்பன் தெற்குவாடி கடற்கரை துறைமுகத்தில் படகுகள் கரை நிறுத்தப்பட்டன.

நேற்று பாக்ஜலசந்தி கடலிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்ததால், மீனவர்கள் நடுக்கடலில் பாதுகாப்புடன் இருக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். நெல்லை, தென்காசியில் பலத்த காற்றுடன் மழை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3ம் தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குற்றாலம் மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை முதல் அபாய அளவில் நீர் கொட்டியதால் ஐந்தருவி, பிரதான அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 16 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் நீர்வரத்து காரணமாக பாபாநாசம் அணையில் 50.70 அடியில் இருந்த நீர்மட்டம் நேற்று 52.90 அடியாக 2 அடி உயர்ந்தது. சேர்வலாறு அணையில் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 71.19 அடியானது.

Related Stories: