கண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோயில் சிலைகள் சேதம்

ஸ்ரீபெரும்புதூர்: கண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோயிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே துலசபுரம் ஊராட்சி கண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோயில் உள்ளது. இங்கு, விநாயகர் சிலை, நவகிரக சிலைகளை மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும், அதே பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி அம்மன் கோயில் பிரகாரத்தின் வெளியில் உள்ள அம்மன் சிலையின் கை பகுதி சேதப்படுத்தி உள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியது. இதனால், அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர், கோயில் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து இடையார்பாக்கம் - பிச்சிவாக்கம் சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீசார், பொதுமக்களிடம் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.

Related Stories: