திருவள்ளூர்: பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால் ஊரின் முக்கிய பகுதியில் நியாய விலைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த கிராமத்தின் எல்லை பகுதியான பெரிய காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நியாய விலை கடையில் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் இருந்துவந்தது. இதனால் பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக பெரியகாலனியில் வசிக்கும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு வசதியாக பகுதி நேர நியாய விலை கடையை ஏற்படுத்தி வாகனம் மூலம் உணவு பொருட்களைக் கொண்டு வந்து வாரத்தில் 3 நாட்களில் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.