திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அன்னதான திட்டத்தில் ஒப்பந்தக்காரரை ஏமாற்றி ரூ.58.67 லட்சம் முறைகேடு செய்த சம்பவத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2018-19ம் ஆண்டில் மண்டல, மகர விளக்கு சீசனில் நிலக்கல்லில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.