பட்டினப்பாக்கம் கடற்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உள்பட 2 கற்சிலைகள் மீட்பு; விற்பதற்காக பதுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையோரம் மணலில் 2 கற்சிலைகள் கிடப்பதை சிறுவர்கள் பார்த்துள்ளனர். உடனே, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பட்டினப்பாக்கம் போலீசாரிடம் சிலைகள் குறித்து சிறுவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் கடற்கரை பகுதிக்கு வந்து அங்கு மணலில் புதைந்து இருந்த 2 கற்சிலைகளை மீட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது பழமையான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, தவம் இருக்கும் முனிவர் போன்ற ஒரு சிலை இருப்பது தெரியவந்தது. பின்னர் இரண்டு சிலைகளையும் போலீசார் மீட்டு மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்படி, வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட சிலைகள்  எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று தொல்லியல் துறை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மீட்கப்பட்ட 2 சிலைகளும் பழமைவாய்ந்த கற்சிலைகள் என்பதால், விற்பனைக்காக சிலை கடத்தல் கும்பல் ஏதேனும் சென்னை துறைமுகம் வழியாக அவற்றை கடத்த திட்டமிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் பழமையான அரிய வகை சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: