தொழில் வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தி பெங்காலி நடிகை தூக்கிட்டு தற்கொலை: 15 நாட்களுக்குள் 2 நடிகைகள் இறந்ததால் சோகம்

கொல்கத்தா: தொழில் வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியில் பெங்காலி நடிகை பிதிஷா டி மஜும்தார் என்பவர் கொல்கத்தாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரின் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் பெங்காலி தொலைக்காட்சி நடிகையும், மாடல் அழகியுமான பிதிஷா டி மஜும்தார் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு முதல் தனது வீட்டின் கதவை திறக்க வில்லை. அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவு திறக்காதது குறித்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்தாழிட்டு பூட்டப்பட்டிருந்தது. அதையடுத்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் பார்த்தனர். அப்போது நடிகை பிதிஷா டி மஜும்தார், மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த போலீசார் பிதிஷா டி மஜும்தாரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பிதிஷா எழுதிய தற்கொலை குறிப்பு கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில், சினிமா, தொலைக்காட்சி தொழில் வாய்ப்புகள் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில், தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அவரது சடலம்  பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக் குறிப்பு கடிதம் குறித்து  ஆய்வு செய்து வருகிறோம். இவர் இதற்கு முன் இரண்டு முறை தற்கொலைக்கு  முயன்றதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்யும் முன், அவரது நண்பர் ஒருவரிடம் பேசியுள்ளார். அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜிம் பயிற்சியாளர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக  அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், கன்கினாராவில் உள்ள தனது பெற்றோர் வீட்டை விட்டு  கொல்கத்தாவிற்கு வந்துள்ளார்’ என்றனர்.

முன்னதாக கடந்த மே 15ம் தேதியன்று மற்றொரு பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே, மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது லைவ்-இன் பார்ட்னர் சாக்னிக் சக்ரவர்த்தி என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லவி டே தற்கொலை செய்து கொண்ட 15 நாட்களுக்குள் மற்றொரு நடிகையான பிதிஷா டி மஜும்தார் தற்கொலை செய்து கொண்டது மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: