இந்திய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக அன்று காங்கிரஸ்... இன்று பாஜக!: பிரசாந்த் கிஷோர் புது விளக்கம்

புதுடெல்லி: பிரபல ஆங்கில நாளிதழ் சார்பில் டெல்லியில் நடந்த தேசியக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், ‘இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்தவொரு விஷயமோ அல்லது கருத்தியலோ அதன் உச்சத்தை அடைந்த பின்னர், அந்த அமைப்பு கட்டாயம் சரிவை சந்திக்கும் என்பதுதான் விதி. அதனால், பாஜகவுக்கும் இந்த நிலை ஏற்படும் என்று பலரும் கருதுகின்றனர். நானும் அதனை ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால், அதுபோன்ற விஷயம் உடனே நடைபெறாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 ஆண்டு வரை நடைபெறாது. அகில இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால், அக்கட்சி அவ்வளவு எளிதில் வலுவிழந்து விடாது. அதற்காக, வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என்று நான் கூறவில்லை.

அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும் என்கிறேன். அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு நீங்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும்; இல்லையெனில் எதிர்க்க வேண்டும். அப்படியில்லாமல், பாஜகவை உங்களால் புறக்கணிக்க முடியாது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவில் முதல் 40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இன்று பாஜக இருந்த நிலையில்தான் காங்கிரசும் அன்று இருந்தது’ என்றார்.

Related Stories: