பாட்னா: சிபிஐ அதிகாரிகளை தடுத்த தனது கட்சி தொண்டர்களின் கன்னத்தில் லாலுவின் மனைவி ரப்ரிதேவி அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயில் வேலை வாங்கி கொடுப்பதற்காக, முக்கிய இடங்களில் உள்ள நிலங்களை லஞ்சமாக வாங்கி கொண்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் அவருக்கும், குடும்பத்தினருக்கும் சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.