அசாமில் இடைவிடாமல் பெய்து வரும் மழை; வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழப்பு; 6 லட்சம் பேர் தவிப்பு

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பதால் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டி வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மலைப்பாங்கான மாவட்டமான திமா கசாவோவில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பியாங்பை, மவுல்கோய், தெற்கு பகேதர், மகாதேவ் தில்லா உள்ளிட்ட கிராமங்களில் நிலச்சரிவு காரணமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடந்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் சாலை, ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜதிங்கா-ஹரங்கஜாவோ மற்றும் மகுர்-பைடிங் ரயில்வே பாதை நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளன. தலைநகர் கவுகாத்தியின் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஹோஜாய் மற்றும் கச்சார் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கனமழையால் அசாமில் 48 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் 248 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 27 மாவட்டங்களில் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை பெய்து வரும் மாவட்டங்களில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கவுகாத்தியில் உள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கு அப்பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் மாநிலத்திற்கு ஒன்றிய அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’ என உறுதியளித்துள்ளார். ட்விட்டரில், அவர் ஏற்கனவே அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுடன் பேசியதாக கூறினார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை பராமரிக்கவும், தகவல் தொடர்பு சேனல்களை மீட்டெடுக்கவும் மாநிலம் போராடி வருகிறது.

Related Stories: