குவாரியில் சிக்கியவர்களை மீட்க துரித நடவடிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களோடு வந்து கதறி அழுத பெண்கள்

நெல்லை:  குவாரியில் சிக்கியவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் நேற்று திரண்டனர். பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் கதறி அழுதபடியே அதிகாரிகளை சந்தித்தனர். நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதில் 2 பேர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட செல்வம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். முருகன்(25), ராஜேந்திரன்(42), செல்வக்குமார்(30) ஆகிய 3 பேரையும் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் குவாரியில் சிக்கி கொண்டவர்களை மீட்க கோரி அவர்களது உறவினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். நெல்லை ஊருடையான்குடியிருப்பு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(42). அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் சிக்கிய இவரது நிலை என்ன என்று தெரியவில்லை. இந்நிலையில் அவரது மனைவி மணிமேகலை(38), மகள் வேம்பரசி, மற்றும் உறவினர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அப்போது மணிமேகலை, தனது கணவர் கதி என்ன என்பது தெரியாமல் கலெக்டர் அலுவலகத்தில் அழுது புரண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘விபத்து நடந்த கல் குவாரியில் எனது கணவர் ராஜேந்திரன், லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது மகன் முகேஷ், தந்தையின் நிலையை எண்ணி அழுதவாறே இன்று பிளஸ் 1 தேர்வு எழுத சென்றுள்ளார். சனிக்கிழமை வேலைக்கு சென்ற எனது கணவர், என்ன ஆனார் என்று தெரியவில்லை. கல் குவாரி பகுதியில் எங்களை செல்லவிடாமல் போலீசார் தடுக்கின்றனர்.

எனவே எனது கணவரை மீட்டுத்தர மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்’’ என்றார். பின்னர் அவரை டிஆர்ஓவிடம் மனு அளிக்க பெண் போலீசார் அழைத்து சென்றனர். நாங்குநேரி செண்பகராமநல்லூர் கிராமம் காக்கைகுளத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(30). இவரது மனைவி சேர்மகல்யாணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடியே நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். சேர்மகல்யாணியின் தாயார் பேச்சியம்மாள் அழுதபடியே சென்று கலெக்டர் கார் நிறுத்துமிடத்தில் மயங்கி விழுந்தார். பெண் போலீசார் அவர்களை அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர்.

சேர்ம கல்யாணி அளித்த மனு: எனது கணவர் செல்வக்குமார் அடைமிதிப்பான்குளம் குவாரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அரசு விதிமுறைகளை மீறி பாதுகாப்பு இல்லாமல் இயங்கிய குவாரியில் விழுந்த பாறைகளுக்கு மத்தியில் எனது கணவர் சிக்கி கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. கல்லுக்குள் சிக்கி கொண்ட யாரும் இதுவரை கிடைக்கவில்லை. 40 மணி நேரத்திற்கும் மேலாக பாறை குவியலுக்குள் சிக்கி தவிக்கும் எனது கணவரை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். பட்டதாரி பெண்ணான சேர்மகல்யாணிக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆன நிலையில், ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: