ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இரு மடங்கு உயர்ந்த தக்காளி விலை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் பெட்டி ரூ.800 வரை உயர்ந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட் தென்மாவட்டங்களில் பிரபலமானது. இங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் கேரள நகரங்களுக்கு காய்கறி தினமும் அனுப்பப்படுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், தேவத்தூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, வடகாடு, பால்கடை, பெத்தெல்புரம், கண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

இவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்வர். சமீபத்தில் பெய்த தொடர்மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டது. வரத்து குறைவால் நேற்று ஒரு பெட்டி ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது.

பீட்ரூட்டும் எகிறியது

சின்னமனூர்:  தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் கடும் வெயில், வறட்சி காரணமாக பீட்ரூட் உற்பத்தி சரிந்துள்ளது. இதனால் சின்னமனூர் ஏலச்சந்தைக்கு பீட்ரூட் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.12க்கு விற்பனையான பீட்ரூட், நேற்று ரூ.20 என அதிகரித்தது. கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பீட்ரூட் உற்பத்தி மேலும் பாதிக்கும். எனவே வரும் நாட்களில் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளதால் விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: